Tuesday 6 August 2013

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் மீது நம்மில் பலருக்கும் ஏதோவொரு இனம் புரியாத மோகம் இருக்கும். அல்லது அது மாதிரி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். மேலை நாடுகள் என்றாலே, அங்கே தேனும் பாலும் ஓடுவதைப் போலொரு மாயத்தோற்றத்தை நமது கல்விமுறையும், சமூகக் கருத்தியலும் நமக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது. அதிலும் இந்த நாடுகளில் வேலை கிடைத்து, நாம் அங்கே போகப்போகிறோம் என்றவுடன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்ததைப் போன்று ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இது மேல்படிப்புக்காக செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும்.

இப்படிக் கனவுகளோடு வருகிறவர்கள் எதிர்கொள்ளும் ஆரம்பக்கால அவஸ்தைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. என்ன தான் போகப்போகிற ஊரை/நாட்டைப் பற்றி விவரங்கள் தெரிந்திருந்தாலும் கூட, வந்து இறங்கியவுடன் ஒரு அந்நிய உணர்வும், வெறுமையும் சூழ்ந்து கொள்வதை தவிர்க்க முடியாது. இதனால் ஏற்படும் பதற்றமும், பாதுகாப்பில்லாத உணர்வும் வார்த்தையால் விவரிக்க முடியாத அவஸ்தை. அதிலும் வரும் ஊரில் தெரிந்தவர்கள் என யாரும் இல்லையென்றால் கேட்கவே வேண்டாம். தனியாக வருபவர்கள் தங்குமிடத்தை முடிவு செய்வதற்குள் தாவு தீர்ந்து விடும். சுயமாய் சமையல் செய்யத் தெரிந்தவர்கள் பிழைத்தார்கள். சமைக்கத் தெரியாதவர் பாடு திண்டாட்டம் தான்.

அமெரிக்கா / கனடா என எங்குப் போனாலும் SSN என்ற அடையாள அட்டையை வாங்கப்போனால், பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர் சரியில்லை, இது சரியில்லை, அது சரியில்லை என்று சில நேரங்களில் நம்பெயரை நினைத்து நாமே வருத்தப்பட வேண்டிய அனுபவமெல்லாம் கூட கிடைக்கும். நமக்கு தெரிந்ததெல்லாம் குடும்பப்பெயரின் முதலெழுத்து, அப்பா பெயரின் முதலெழுத்து. பிறகு வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி நமக்கு வைத்த பெயர். இங்கு வந்தால் முதல்பெயர், கடைசி பெயர் என்ன என்று கேட்டு குழப்புகிற குழப்பலில் சொந்த பெயரே உருமாறி விடும். என்ன செய்வது இந்த அடையாள அட்டை கிடைத்தவுடன் தான் வேலையில் சேரமுடியும்.

இத்தனையும் சமாளித்து முதல்நாள் பயந்து பயந்து மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல், அலுவலகம் போய் பரஸ்பர அறிமுக சடங்குகள் எல்லாம் முடிந்த உடன் நம்மை ஓரிடத்தில் உட்கார வைத்து கத்தை கத்தையாய் படிவங்களைக் கொடுத்து படித்துப் பார்த்து கையொப்பமிட்டு கொண்டு வாருங்கள் எனச் சொல்லும் போது, அதில்என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் கிறுகிறுத்துப் போய்விடும். நம் சம்பளத்திலிருந்து எவ்வளவு பணத்தை ஓய்வூதியத்திற்கு, மருத்துவக் காப்பீட்டிற்கு, அவசர மருத்துவ விடுப்பு, அது இது எது என்று பாதி புரிந்தும் புரியாமலும் அதை முடித்துக் கொடுக்க வேண்டும். இப்போது வரும் பலரும்இந்த விஷயங்களில் கில்லாடியாக இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment